Friday 6 September 2013

வேதியியல்(இரசாயன) குண்டுகள் பற்றிய தகவல்கள்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்ன்ர் சீனர்களும் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் சிரியர்களும் வேதியியல் படைக்கலன்கள் பாவித்துள்ளனர். தம்மை ஆக்கிரமித்து ஆட்சி செய்து கொண்டிருந்த ரோமானியர்களுக்கு எதிராக சிரியர்கள் வேதியியல் குண்டுகள் பாவித்தார்கள்.

க்ண்ணீர்ப்புகைக் குண்டுகளும் போர் முனையில் தடைசெய்யப்பட்டவையே. ஆனால் ஒரு நாட்டுக் காவற்துறையினர் கலவரம் செய்வோரை அடக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பாவிப்பது தடை செய்யப்படவில்லை.

மூன்று வகையான வேதியியல் குண்டுகள் இருக்கின்றன:

    1. Choking Agents (e.g., phosgene, chlorine) இவை மூச்சுத் திணறச் செய்து கொல்லுபவை
    2. Blister Agents (e.g., nitrogen mustard, Lewisite) - இவை தோலைத் தாக்கி கடுமையயன வலி ஏற்படுத்தி கொப்பளங்கள் வரச்செய்து உடம்பில் காயத்தை ஏற்படுத்தும்
  3.   Nerve Agents (e.g., Tabun, Sarin, VX) - இவை எமது உடல்களின் உறுப்புக்களுக்கு இடையிலான நரம்பு மண்டலத் தொடர்பாடுகளை இழக்கச் செய்து இதயம் போன்ற முக்கிய உறுப்புக்களை செயலிழக்கச் செய்து கொல்லும்.

பொதுவாக குண்டுகள் விழும்போது நாம் பதுங்கு குழிகளுக்குள் ஒளிவது வழக்கம். ஆனால் வேதியியல் குண்டுகளில் இருந்து தப்ப நாம் உயரமான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

வேதியியல் குண்டுகளுக்கு எதிரான பன்னாட்டு உடன்படிக்கை 1925இல் ஜெனிவாவில் கைச்சாத்திடப்பட்டது.

1993இல் மீண்டும் ஒரு வேதியியல் உடன்படிக்கையில் பல நாடுகள் கையொப்பமிட்டன. சிரியா, எகிப்து, வட கொரியா, அங்கோலா ஆகிய நாடுகள் அதில் கையொப்பமிடவில்ல. இஸ்ரேலும் பர்மாவும் கையொப்பமிட்டாலும் அந்த நாட்டு பாராளமன்றம் அவற்றை இன்னும் அங்கீகரிக்கவில்லை.

ஐக்கிய அமெரிக்கா, இரசியா, ஜப்பான் ஆகிய நாடுகள் தம்மிடம் வேதியியல் குண்டுகள் இருப்பதை ஒத்துக் கொண்டுள்ளன.

முதலாம் உலகப் போரில் ஜேர்மனி வேதியியல் குண்டுகள் பாவித்தது.

இரண்டாம் உலகப் போரில் இத்தாலி, ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா வேதியியல் குண்டுகளைப் பாவித்தன.

1962இற்கு 1967இற்கும் இடையில் அமெரிக்கா வியட்னாமில் ஜெனீவா உடன்படிக்கையை மீறி வேதியியல் படைக்கலன்களைப் பாவித்தது.

1980இற்கும் 1988இற்கும் இடையில் நடந்த ஈரானுடனான போரின் போது ஈராக் பலதடவை பல வகையான வேதியியல் குண்டுகளைப் பாவித்தது.

1995இல் ஒரு மதவாதக் குழு ஜப்பானில் சரின் குண்டுத்தாக்குதல் செய்தது.

இலங்கையின் இறுதிப் போரின் போது மன்னாரில் இருந்து கிளிநொச்சி நோக்கி முன்னேற முடியத நிலை ஏற்பட்ட போது அரச படைகள் தடை செய்யப்பட்ட படைக்கலன்கள் அங்கு பாவிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. அவற்றை இந்தியாதான் இலங்கைக்கு வழங்கியது என சிலர் சந்தேகிக்கின்றனர். 2009 மே நடுப்பகுதியில் பின்புறமாக இருந்து தாக்கச் சென்ற ஒரு விடுதலைப் புலிகளின் படையணிமீது இலங்கைப் படையினர் தடை செய்யப்பட்ட படைக்கலன்களைப் பாவித்தனர் என்ற குற்றச் சாட்டும் உள்ளது.

சிரியாவிடம் ஆயிரம் தொன் எடையுள்ள வேதியியல் குண்டுகள் இருப்பதாக கருதப்படுகிறது. உலகெங்கும் 13,000 தொன் குண்டுகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனின் கணிப்பின் படி சிரியாவில் நிலைமை மோசமாகி அங்குள்ள வேதியியல் படைக்கலன்களும் மற்றப் படைக்கலன்களும் இசுலாமியப் போராளிகளின் கைகளுக்குப் போகாமல் இருக்க 75,000 அமெரிக்கப் படையினர் தேவை.

எல்லாவற்றிக்கும் கணக்குப் போட்டு வைத்திருக்கிறார்கள்!

Thursday 5 September 2013

இந்திய நாணய நெருக்கடியைத் தொடர்ந்து கடன் நெருக்கடி ஏற்படுமா?

நாணய நெருக்கடி என்பது ஒரு நாட்டிற்குத் தேவையான நிலையில் அதன் நாணயத்தின் மதிப்பு இல்லாமல் இருக்கும்போது ஏற்படுகிறது. இது நாட்டின் ஏற்றுமதியிலும் பார்க்க இறக்குமதி அதிகரித்தும் வெளிநாட்டில் இருந்து முதலீடுகள் உள்வராத போதும் ஏற்படும்.

கடன் நெருக்கடி என்பது ஒரு நாடானது அளவிற்கு அதிகமாகக் கடன் பட்டு தனது கடனிற்கான தவணைப் பணத்தையும் வட்டியையும் திருப்பிச் செலுத்த முடியாமலும் புதிதாகக் கடன் பெறமுடியாமலும் இருக்கும் போது ஏற்படும். கிரேக்க நாடு இப்படி ஒரு நெருக்கடிக்கு உள்ளானது.

அண்மைக்காலங்களாக  இந்தியாவின் ரூபாவின்  மதிப்பு கட்டுகடங்காமல் வீழ்ச்சிக்கு  உள்ளானது. ரூபாவின் வீழ்ச்சி இந்தியப் பொருளாதரத்தைப் பொறுத்த வரை ஒரு நோய் அல்ல ஒரு பெரும் நோயின் அறிகுறியே. இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2013 மார்ச் மாதம் முடிவடைந்த ஓராண்டு காலத்தில் 13 விழுக்காடு அதிகரித்துது. அது390 பில்லியன் அமெரிக்க டொலர்களானது.  இந்தியாவின் குறுங்காலக் கடன் 2013 மார்ச் மாதம் 172 பில்லியன் டாலர்களானது. 2014 மார்ச் மாதம் இந்தியா எப்படி தனது குறுங்காலக் கடனை அடைக்கப் போகிறது என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு இந்தியா பன்னாட்டு நாணய நிதியத்திடம் கடன் பெறச் செல்ல வேண்டும். அது இந்தியாவின் ரூபாவின் பெறுமதியைக் குறைக்கச் சொல்லி கேட்கும். இதனால் இந்திய ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக 70வரை செல்லலாம். ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் Deutsche Bank இந்திய ரூபா 70 வரை விழலாம் என எதிர்வு கூறிய போது நம்ப முடியாமல் இருந்தது. ஆனால் இப்போது அதிலும் மோசமான நிலை இந்திய ருபாவிற்கு ஏற்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

அதிக கடனை இந்திய அரசு குறைக்குமா
இந்திய அரசு அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் பாராளமன்றத் தேர்தலை எதிர் கொள்ள வேண்டும். ஆளும் கட்சியின் வெற்றி வாய்ப்புக் குறையாமல் இருக்க இந்திய அரசு அதிக செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். அதில் ஒன்றுதான் உணவுப் பாதுகாப்புச் சட்டம். இது இந்தியாவின் அரசின் செலவீனங்களை அதிகரிக்கும். இது இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்த வரை வயிற்றோட்டத்தால் அவதிப் படும் நோயாளிக்கு பேதி மருந்து கொடுத்தது போலாகும்.

அதிகரித்துக் கொண்டிருக்கும் எரிபொருள் நிலை இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதிப் பற்றாக்குறையை இன்னும் மோசமாக்கும். அத்துடன் பல இந்திய நிறுவனங்கள் தாம் பட்ட கடன்களுக்கான வட்டியை மீளளிக்கும் திறன் இன்றி(negative interest cover) இருக்கின்றன. இது இந்தியாவின் வங்கிகளிற்கு ஒரு நிதி நெருக்கடியை ஏற்படுத்தலாம். இந்திய வங்கிகள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் போது இந்திய மைய வங்கியான ரிசேர்வ் வங்கி அவற்றிற்கு உதவி செய்ய முடியாத நிலை ஏற்படும். காய்ந்து போன நிலங்கள் எல்லாம் வற்றாத நதியைப்பார்த்து ஆறுதலடையும். ஆனால் அந்த நதியே காய்ந்து போய் கிடக்கும் போது நிலங்கள் என்ன செய்ய முடியும். Moody's Investors Service பதினொரு இந்திய வங்கிகளின் கடன்படு தரத்தை குறைத்துள்ளது.  4.8விழுக்காடு வளரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் 4.4 விழுக்காடு மட்டுமே வளர்ந்ததுள்ளது. பொருளாதாரம் வளரும் வேகம் குறையும் போது இந்திய நிறுவனங்களின் இலாபம் குறைய இந்திய வங்கிகள் அவற்றிற்கு கொடுத்த கடன்கள் அந்த நிறுவனங்களால் மீளளிக்க முடியாத நிலை மேலும் மோசமாகும். இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததிலும் குறைவாக வளரும் போது அரசின் வரி வருமானம் குறையும். இதனால் அரச கடன் நெருக்கடி மேலும் மோசமாகும்.

Wednesday 4 September 2013

அமெரிக்காவின் தயக்கத்தால் விரக்தியில் இஸ்ரேலிய அரசும் அச்சத்தில் இஸ்ரேலிய மக்களும்.

சிரியாவில் நடந்ததாகக் கருதப்படும் வேதியியல் குண்டுத் தாக்குதலால் சிரிய மக்களிலும் பார்க்க அதிக அச்சத்தில் இஸ்ரேலிய மக்களே இருக்கிறார்கள். சிரியாவின் வேதியியல் குண்டுத் தாக்குதலுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாததையிட்டு சிரியக் கிளர்ச்சிக்காரர்களிலும் பார்க்க இஸ்ரேலிய அரசே அதிக விரக்தியடைந்துள்ளது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் பதவியில் இருப்பதை இஸ்ரேல் விரும்பினாலும் சிரியாவிடம் இருக்கும் வேதியியல் குண்டுகளைப் பற்றி மற்ற எல்லாத் தரப்பினரிலும் பார்க்க அதிக கரிசனையைக் கொண்டுள்ளது.

சிரியாவில் வேதியியல் குண்டுகள் விழுந்தவுடன் இஸ்ரேலிய அரசு தனது மக்களுக்கு வேதியியல் குண்டுகளில் இருந்து தப்புவதற்கான முகமூடிகளை அவசர அவசரமாக வழங்கியது.

சிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவிக்கப்பட்டால் அது செங்கோட்டைத் தாண்டியது போலாகும். அமெரிக்கா அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்திருந்தார். சிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவிக்கப்பட்டமை உறுதிப் படுத்தப்பட்டவுடன் அமெரிக்கா படை நடவடிக்கையில் ஈடுபடும் என இஸ்ரேலிய அரசு எதிர்பார்த்தது. ஆனால் பிரித்தானியப் பாராளமன்றம் பிரித்தானியா படை நடவடிக்கை எடுப்பதைத் தடுத்ததும் ஒபாவும் அமெரிக்கப் பாராளமன்றத்தின் அனுமதியைக் கோரியமையும் இஸ்ரேலைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்ததில் இருந்து இஸ்ரேல் அங்குள்ள வேதியியல் குண்டுகளைப் பற்றியும் மற்ற படைக்கலன்களைப் பற்றியும் அதிக கரிசனை கொண்டது. சிரியாவில் இருந்து லெபனானிய ஹிஸ்புல்லா இயக்கம் படைக்கலன்களை லெபனானிற்கு எடுத்துச் செல்ல முயன்றபோது இஸ்ரேல் தனது விமானங்களை அங்கு அனுப்பி குண்டு வீசித் தடுத்தது. சிரியாவில் உள்ள விமான எதிர்ப்புப் படைக்கலன் கிடங்குகள் மீது தாக்குதல் நடாத்தியது. சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்ததில் இருந்து பலதடவை இஸ்ரேல் விமானங்கள் மூலம் குண்டுத் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

ஈரான் அணுக் குண்டுகளை உற்பத்தி செய்யும் போது அமெரிக்கா ஈரானில் குண்டு வீசி அவற்றை அழிக்கும் என இஸ்ரேல் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. சிரியா மீது தாக்குதல் நடத்த வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் காட்டும் தயக்கம் இஸ்ரேலை சற்று உலுப்பியுள்ளது. சிரியாவில் தாக்குதல் செய்யவே இந்த அளவு தயக்கம் என்றால் சிரியாவிலும் பார்க்க அதிக படைப்பலமும் பல இசுலாமிய தீவிரவாத இயக்கங்களைத் தன் கைக்குள் வைத்திருக்கும் ஈரான் மீது அமெரிக்கா எப்படித் தக்குதல் நடத்தும் என்ற கேள்வி இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளத

2013 ஆகஸ்ட் 21-ம் திகதிக்கு முன்னரே பல தடவை சிரிய அரச படைகள் வேதியியல் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொண்டிருந்தன. இவற்றை அமெரிக்கா ஏன் தனது கரிசனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என இஸ்ரேலிய அரசும் மக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

லிபியாவில் மும்மர் கடாஃபியின் ஆட்சிக்கு எதிராக தாக்குதல் நடத்த வேண்டும் என முதலில் ஆரம்பித்தது பிரான்ஸும் இத்தாலியுமே. ஆரம்பத்தில் அமெரிக்கா தயக்கம் காட்டியது. பின்னர் அமெரிக்காதான் கடாஃபியின் படைநிலைகள் மீது கடும் தாக்குதல் நடத்தியது. சிரியாவில் வேதியியல் குண்டுத் தாக்குதல் நடந்தவுடன் சிரியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கை எடுக்க வேண்டும் என துருக்கியும் பிரன்ஸும் பிரித்தானியாவும் துள்ளிக் குதித்தன. மாலியில் மற்ற நேட்டோ நாடுகளைப்பற்றிக் கவலைப்படாமல் பிரான்ஸ் களத்தில் இறங்கி அல் கெய்தாவிடமிருந்து மாலியை மீட்டது.

அமெரிக்க மூதவையின் வெளியுறவுக் குழு உறுப்பினர்களின் முன் தோன்றி சிரியாமீது தாக்குதல் நடத்த வேண்டியதன் அவசியத்தை அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரியும் பாதுகாப்புத் துறைச் செயலர் சக் ஹஜெலும் (Chuck Hagel) எடுத்துக் கூறினர். சிரிய அரசப் படைகள் வேதியியல் குண்டுத் தாக்குதலுக்கு உத்தரவிட்டமைக்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக ஜோன் கெரி கூறினார்.

அமெரிக்க் அதிபர் பராக் ஒபாமாவும் துணை அதிபர் ஜோ பிடனும் அமெரிக்க மக்களவையின் தலைவர் ஜோன் போனெரையும் குடியரசுக் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் நான்சி பேலோசியையும் சந்தித்து சிரியா தொடர்பாக உரையாடினார்கள்.  சிரியாவில் தான் செய்யப் போவது ஈராக்கைப் போலவோ அல்லது ஆப்கானிஸ்த்தானைப் போலவே நிச்சயம் இருக்க மாட்டாது என ஒபாமா தெரிவித்தார். இவர்கள் இருவரும் சிரியாமீதான தாக்குதலுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்த ஒபாமாவின் நடவடிக்கைக்கு அவரது எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியின் தலைவர் ஆதரவு வழங்கியது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்கப் பாராளமன்றத்தில் பலமிக்கவர்களான யூத அரசியல் தரகர்கள்(Lobbyists) சிரியாவிற்கு எதிரான தாக்குதலுக்கு ஆதரவு திரட்டுவதில் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள்.

செப்டம்பர் 5-ம் திகதி இரசியாவில் நடக்கவிருக்கும் ஜி-20 நாடுகளின் மாநாட்டில் சிரியாவிற்கு எதிரான தனது மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைக்கு ஒபாமா மற்ற நாடுகளிடமிருந்து ஆதரவு திரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Monday 2 September 2013

அந்த ஒரு முகம்போல் வருமா

ஆசைகள் எல்லாம் நியாயங்கள் அல்ல
நியாயமானவை எல்லாம்
தேவையானவையும் அல்ல
நினைப்பவை எல்லாம் கிடைப்பதுமில்லை
கிடைத்தவை எல்லாம் நிலைப்பனவுமல்ல

ஆயிரம் முகங்கள்
கண்ணில் விழுந்தாலும்
இதயத்தில் விழுந்த
அந்த ஒரு முகம்போல் வருமா

உனக்கும் எனக்கும்
இடையில் இருக்கும்
ஒற்றுமைகளை
உணர்ந்து கொள்வது அன்பு
எம் இருவருக்கும் இடையில்
இருக்கும் வேற்றுமைகளை
மதிப்பது நட்பு
எம் வெற்றிகளுக்கு
இணைந்து உழைப்பது
பேரின்பம்.

கடற் கரையில்
இலகுவாய்க் கிடைப்பது உப்பு
இடர் தாங்கி உழைத்தால்
கிடைப்பது முத்து


வாழ்க்கை என்பது
சமைத்து ஊட்டிவிடும் அம்மா அல்ல
சமையல் புத்தகம் மட்டுமே
எமது உணவிற்கான பொருட்களை
நாமே தேடியெடுப்பது முயற்ச்சி
சமைப்பது உழைப்பு
சுவையே வெற்றி

சமாதியாகிப்போனது நேற்று
சாத்தியமற்றது நாளை
உழைப்பைக் கேட்பது இன்று

சிரியாமீது தாக்குதல் நடக்குமா?

ஓகஸ்ட் 29-ம் திகதி பிரித்தானியப் பாராளமன்றம் அவசரமாகக் கூடி சிரியாமீது தாக்குதல் செய்யக் கூடாது என எடுத்த தீர்மானம் உலக அரசியல் சமன்பாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்த்தான், ஈராக், லிபியா ஆகிய நாடுகளின் மீது பிரித்தானியப் படைகள் தாக்குதல்கள் நடாத்த பிரித்தானியப் பாராளமன்றத்தின் ஒப்புதல் இன்றியே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இவை பல தடவை பல தரப்பிலும் இருந்து கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதுவே பிரித்தானியத் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் சிரியாமீதான தாக்குதலுக்கு பாராளமன்றத்தின் அனுமதியைக் கோரினார். 

பிரித்தானியப் பாராளமன்றத்தின் நிராகரிப்பு ஐக்கிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையும் அமெரிக்கப் பாராளமன்றத்தின் ஒப்புதலைக் கோரவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. அமெரிக்க அதிபரும், பிரித்தானியத் தலைமை அமைச்சரும், பிரெஞ்சு அதிபரும் கூடி முடிவெடுத்தால் எந்த நாட்டிலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலைமையை பிரித்தானியப் பாராளமன்றத்தின் முடிவு மாற்றிவிட்டது. பிரித்தானியப் பிரதமர் அமைச்சரவையை மட்டும் கூட்டி சிரியாமிதான தாக்குதல் பற்றி முடிவெடுத்திருக்கலாம். ஆனால் அவர் பாராளமன்றத்தின் அனுமதியைக் கோரினார். மறுக்கப்பட்டது. இப்போது அவரால் பாராளமன்றத்தின் முடிவிற்கு எதிராக செயற்பட முடியாது. பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புக்களில் பெரும்பானமயான மக்கள் சிரியாமீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியப் பாராளமன்றத்தின் நிராகரிப்பு மத்திய கிழக்கில் எதற்கும் முந்திக் கொண்டு நிற்கும் பிரெஞ்சு அரசையும் தடுமாறவைத்துள்ளது. சிரியாவைச் சூழவுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜோர்தானும் துருக்கியும் சிரியாவிற்கு எதிரான தாக்குதல்கள் தமது நாட்டில் இருந்து செய்யப்படுவதற்கு தயங்குகின்றன.

சிரியாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டும் பல இலட்சக்கணக்கான மக்கள் இடப்பெயர்வுக்கும் அவலத்திற்கும் உள்ளாகியுள்ளனர். அங்கு மனித அவலங்களோ உள்நாட்டுப் போரோ தற்போது முடிவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.  அங்கு தொடரும் அட்டூழியங்களும் அழிவுகளும் முடிவிற்கு வருவதற்கு ஒரு வெளித் தலையீடு அவசியம்.  இரசியாவும் சீனாவும் சிரியாவின் பஷார் அல் அசாத்தின் ஆட்சிய் தொடருவதை விரும்புவதால் ஐக்கிய நாடுகள் சபை தலையிடுவதற்கு சாத்தியமே இல்லை. அரபு லீக் நாடுகள் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் சிரியாவில் ஒரு படைத்துறைத் தலையீடு செய்வதை வேண்டி நிற்கின்றன.

R2P எனப்படும் Responsibility to protect காக்கும் பொறுப்பு
2001-ம் ஆண்டு மனித உரிமைகள் தொடர்பான நிபுணர்களடங்கிய தலையீட்டிற்கும் அரச இறைமைக்குமான பன்னாட்டு ஆணையகம் முதலில் காக்கும் பொறுப்பு என்ற கோட்பாட்டை முதலில் உருவாக்கியது.  ஒரு நாட்டில் மோசமான வன்முறை உள்நாட்டுப் போர் காரணமாகவோ, கிளர்ச்சியாலோ, அடக்கு முறையாலோ ஒரு மக்களின் குழுவிற்கோ அல்லது குழுக்களுக்கோ எதிராக நடக்கும் போது அந்த நாட்டு அரசானது அந்த வன்முறைகளை தடுக்க இயலாமலோ அல்லது முடியாமலோ இருக்கும்போது பன்னாட்டு சமூகத்திற்கு அந்த நாட்டில் தலையிட்டு நடக்கும் அல்லது நடக்கவிருக்கும் வன்முறையை தடுக்க வேண்டிய அறரீதியான கடப்பாடு உண்டு. இந்தக் காக்கும் பொறுப்பு அடிப்படையில்தான் 1999இல் கொசோவாவில் அமெரிக்கா தலைமையில் தலையீடு மேற்கொள்ளப்பட்டது. அதே அடிப்படையில் சிரியாவில் ஏன் தலையிட முடியாது என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஆனால் காக்கும் பொறுப்பு கோட்பாடு சிரியாவில் அமூல்படுத்தப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கவில்லை.

பவல் கோட்பாடு
காக்கும் பொறுப்பு கோட்பாட்டைப் பார்க்கும் போது நாம் இன்னும் ஒரு கோட்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதுதான் பவல் கோட்பாடு. 2009-ம் ஆண்டு ஒரு பேட்டியொன்றில் அமெரிக்காவின் முன்னாள் படைத்தளபதி கொலின் பவல் அவர்கள் அமெரிக்கா ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதானால் எட்டு நிபந்தனைகள் திருப்திப்படவேண்டும் எனக் கூறினார். இது அமெரிக்காவின் இரு கட்சிகளிலும் உள்ள சமாதன்ப் புறாக்களாலும் போர் விரும்பிக் கழுகுகளாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. இன்றும் பல அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் அதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவை: 1. அமெரிக்காவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்க வேண்டும். 2. போரில் அடையக்கூடிய நோக்கம் இருக்க வேண்டும். 3. போரின் நன்மைகளும் ஆபத்துக்களும் சரியாக கருத்தில் கொள்ளப்படவேண்டும். 4. மற்ற வமுறையற்ற வழிகள் பயனளிக்காமல் போயிருக்க் வேண்டும். 5. போரை முடித்துக் கொண்டு வெளியேறும் உபாயம் சரியாக வகுக்கப்பட வேண்டும். 6. போர் நடவடிக்கியின் விளைவுகள் யாவும் சரியாக கருத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். 7. அமெரிக்க மக்களின் ஆதரவு இருக்க வேண்டும். 8. பரவலான பன்னாட்டு ஆதரவு இருக்க வேண்டும். சில அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் சிரிய நிலைமை இந்தக் கோட்பாடுகளைத் திருப்திப்படுதவில்லை என வாதாடுகிறார்கள். பல உறுப்பினர்கள் சிரியாவிற்கு எதிரான படை நடவடிக்கை தொடர்பான சரியான் உபாயங்களும் திட்டங்களும் தமக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்கின்றனர். வெள்ளை மாளிகையிலும் பெண்டகனிலும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பராக் ஒபாமா அவசரப்படவில்லை
அமெரிக்கப் பாராளமன்றத்தின் அனுமதி பெற்றே சிரியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஒபாமா பிரித்தானியத் தலைமை அமைச்சர் போல் அவசரப்படவில்லை. பிரித்தானியப் பிரதமர் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்த தனது பாராளமன்ற உறுப்பினர்களைக் குழப்பி ஒரு அவசரப் பாராளமன்ற அமர்வை கூட்டினார். தனது கட்சியின் உறுப்பினர்களுக்கே அவர் தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்தி முழுமையான ஆதரவைப் பெறவில்லை. அவரது கட்சி உறுப்பினர்கள் 35பேர் அவரது முன்மொழிவிற்கு எதிராராக வாக்களித்தனர். ஒபாமா செப்டம்பர் 9-ம் திகதி பாராளமன்றம் மீண்டும் கூடும் வரை காத்திருக்கிறார். ஆனால் தான் ஐக்கிய நாடுகளின் வேதியியக் குண்டுகள் தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு தான் காத்திருக்கப்போவதில்லை தன்னிடம் சிரியப் படைகள் வேதியியல் குண்டுகள் பாவித்தமைக்கான ஆதரவுகள் இருப்பதாக அவர் கூறுகிறார். சிரியாமீது தாக்குதல் நடக்கும் என்கிறார். தாக்குதல் குறுகிய காலத்தில் நடக்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை என்கிறார். பிரித்தானியத் தலைமை அமைச்சரால் பாராளமன்றத்தின் தீர்மானத்தை மீறிச் செயற்பட முடியாது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்கப் பாராளமன்றம் மறுத்தாலும் சிரியாமீது தாக்குதல் நடாத்தும் அதிகாரம் அமெரிக்க அரசமைப்பின் படி உண்டு. இதனால் அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி ஒபாமா பாராளமன்றத்தின் அனுமதி கேட்கவில்லை. பாராளமன்றத்துடன் கலந்து ஆலோசிக்கிறார்.

ஒபாமா ஏன் அவசரப்படவில்லை
சிரியா அமெரிக்காவின் புவிசார் கேந்திர முக்கியத்துவமோ பொருளாதார முக்கியத்துவமோ வாய்ந்த ஒரு நாடு அல்ல. சிரியாவில் தொடரும் போரால் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் அல் கெய்தா இயக்கத்தினரும் ஆளுக்கு ஆள் அடிபட்டு கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதை அமெரிக்கா விரும்புகிறது. 2011 ஓகஸ்ட் மாதம் பராக் ஒபாம் சிரிய அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றார் அதற்கான எந்த ஒரு காத்திரமான நகர்வுகளையும் அவர் மேற்கொள்ளவில்லை.

அமெரிக்கப் பாராளமன்றம் அனுமதிக்குமா?
அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவை மக்களவை என இரு அவைகள் இருக்கின்றன. இதில் பராக் ஒபாமாவின் மக்களாட்சிக் கட்சிக்கு மூதவையில் சிறிய பெரும்பானமையுடன் இருக்கிறது. ஆனால் மக்களவையில் அப்படி இல்லை. அமெரிக்கப் பாராளமன்றம் எப்படி வாக்களிக்கும் என்று எதிர்வு கூறமுடியாத நிலை இருக்கிறது.

எந்தத் திசையில் இனி சிரியாவில் காய்கள் நகர்த்தப்படும்
சிரியக் கிளர்ச்சிக்காரர்களில் இசுலாமியவாதிகளே இப்போது வலிமையாக இருக்கிறார்கள். அமெரிக்க ஆதரவு சிரிய விடுதலைப் படையில் இருந்து போராளிகள் விலகி அதிக படைக்கலன்களும் பணமும் உள்ள இசுலாமியவாதிகளின் படைகளில் இணைகிறார்கள். அமெரிக்கா சிரியாவில் ஒரு ஆட்சியாளர் மாற்றம் ஏற்படுத்துவது தனது நோக்கமல்ல என அண்மைக் காலங்களாக உறுதியாகச் சொல்கிறது. ஜெனிவாவில் ஒரு சமரசப் பேச்சுவார்த்தையும் நடந்தது, இன்னும் அப்பேச்சு வார்த்தை நடக்கவிருக்கிறது. சிரியாவில் இருக்கும் வேதியியல் படைக்கலன்கள் அழிக்கப்படுவதை அமெரிக்கா விரும்புகிறது. சிரியாவிடம் இருக்கும் வலிமை மிக்க விமான எதிர்ப்புப் படைக்கலன்களை அழிக்கவும் அமெரிக்கா விரும்புகிறது. சிரியாமீது அமெரிக்கா ஒரு மட்டுப்படுத்தப்பட்ட படைநடவடிக்கை என்ற பெயரில் சிரியாவில் இருக்கும் வேதியியல் படைக்கலன்களையும், விமானப் படையையும், விமான எதிர்ப்பு படைக்கலன்களையும், தாங்கிகளையும் அழித்து சிரியப் படைத்துறைச் சமநிலையை சிரிய அரச படைகளுக்கு சாதகமாக மாற்றும்.  பின்னர் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சிக்காரர்களுடன் சிரிய அரசு பேச்சு வார்த்தை நடக்கும். இதில் சிரியக் கிளர்ச்சிகாரர்களிடையே உள்ள இசுலாமியவாதக் கிளர்ச்சிக் குழுக்கள் ஒதுக்கப்படுவர். இதனால் சிரிய அரச படைகளுக்கும் இசுலாமியவாதக் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு அக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் அழிக்கப்படுவார்கள்.

அமெரிக்கப்பாராளமன்றம் மறுத்தால்?

சிரியாமீது தாக்குதல் அமெரிக்கா தாக்குதல் செய்வதை அமெரிக்கப் பாராளமன்றம் மறுத்தால். ஒன்றில் ஒபாமா தன்னிச்சையாகச் செயற்படலாம். அல்லது வேறு வழிகளைக் கையாளலாம். சிரியாவிற்கும் துருக்கிக்கும் இடையில் ஒரு முறுகல் நிலையை உருவாக்கப்படும். துருக்கி மீது சிரியா தாக்குதல் நடாத்தியது போல் ஒரு தாக்குதல் நடாத்தப்படும். துருக்கி ஒரு நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பு நாடு. நேட்டோ நாடுகளுக்கு இடையிலான வாஷிங்டன் உடன்படிக்கையின் ஐந்தாம் பிரிவின் பிரகாரம் எல்லா நேட்டோ நாடுகளும் தமது நாட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது போல் கருதி சிரியாமீது போர் தொடுக்க வேண்டும். இந்தப் போர் தொடுப்பிற்கு பாராளமன்ற அங்கீகாரம் தேவையில்லை.

மொத்தத்தில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு நித்திய கண்டம். ஆனால் தீர்க்க ஆயுள் அல்ல.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...