Saturday 31 January 2015

வேட்டியை மடிச்சுக் கட்டும் இரசியா

உக்ரேனின் கிறிமியாவை தன்னுடன் இணைத்தைத் தொடர்ந்து மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராக கொண்டுவந்த பொருளாதாரத் தடையால் பொருளாதாரப் பிரச்சனைய இரசியா எதிர் கொள்கின்றது ஆனாலும் இரசியா அடங்கியதாகத் தெரியவில்லை. உக்ரேனின் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் அதன் கிழக்குப் பிராந்தியத்தைத் தன்னுடன் இணைக்க இரசியா பெரும் முயற்ச்சி எடுத்துக் கொண்டிருக்கின்றது.

இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை இரசியாவிற்கு எதிரான இரண்டாம் பொருளாதாரப் போர் என்றுதான் சொல்ல வேண்டும். இரசியாவிற்கு எதிரான முதலாம் பொருளாதாரப் போர் சோவியட் ஒன்றியத்தை வீழ்த்தியது. இரண்டாம் பொருளாதாரப் போர் இரசிய அதிபரி விளடீமீர் புட்டீனின் கொட்டம் அடக்க நடக்கின்றது. 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் திகதி இரசிய நாணயமான ரூபிளின் பெறுமதி பெரு விழ்ச்சியை அடைய இரசியா தனது வட்டி விழுக்காட்டை 10.5இல் இருந்து 17 ஆக உயர்த்தியது. இது பற்றி மேற்கத்தைய ஊடகங்கள் வெற்றிக்களிப்புடன் எழுதித் தள்ளின. ஆனால் ரூபிளின் பெறுமதி வீழ்ச்சி இரசியப் பொருளாதாரத்திற்குப் பல நன்மைகளைச் செய்துள்ளது. இரசிய மக்கள்  உள் நாட்டுப் பொருட்களைக் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ளது. இதனால் 2015 ஜவனரி மாத இறுதியில் இரசியா தனது வட்டி விழுக்காட்டை 17இல் இருந்து 15 ஆகக் குறைத்தது. இது இரசிய வங்கிகளிற்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

2015 ஜனவரி இரசியாவில் எடுத்த கருத்துக் கணிப்புக்களின் படி இரசிய மக்களில் 55 விழுக்காட்டினர் இரசியா சரியான பாதையில் செல்வதாகக் கருதுகின்றனர். இது புட்டீன் இப்போதும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கின்றார் என்பதைக் காட்டுகின்றது. 2014-ம் ஆண்டு இந்த மாதிரியான கருத்துக் கணிப்புச் செய்த போது 66 விழுக்காட்டினர் இரசியா சரியான பாதையில் செல்வதாக நம்பினர். மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையால் இரசியாவில் பணவிக்கம் பத்துக்கும் மேல் இருப்பதை இரசிய மக்கள் பொறுத்துக் கொண்டிருக்கின்றனர். இரசிய அன்னை மீது அந்நியர்கள் நடத்தும் தாக்குதலில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என மக்கள் கருதுகின்றனர்.

இரசிய அதிபர் புட்டீனின் தற்போதைய நிலை மூலையில் முடக்கப்பட்ட புலியின் நிலையாகும். ஒன்றில் அவர் அடங்கிப் போகவேண்டும் அல்லது தனது இறுதிப் பாய்ச்சலை மேற்கொண்டு தப்பி ஓட வேண்டும் அல்லது பிடிபடவேண்டும். பொருளாதாரத் தடையாலும் எரிபொருள் விலை வீழ்ச்சியாலும் முடக்கப்பட்ட புட்டீன் அடங்கிப்போவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. கிறிமியாவை இரசியாவுடன் இணைத்தமை புட்டீனின் செல்வாக்கை இரசியாவில் பெருமளவில் உயர்த்தியுள்ளது. உக்ரேனில் அவர் மேற்குலக நாடுகளுக்குப் பாடம் படிப்பிப்பதாக இரசிய மக்கள் கருதுகின்றனர். அதற்கு ஏற்ப இரசிய ஊடகங்களும் மேற்குலகுக நாடுகளுக்கு எதிராகவும் புட்டீனுக்கு ஆதரவாகவும் பெரும் பரப்புரை செய்கின்றன. இதனால் பொருளாதாரப் பிரச்சனையால் மக்கள் தன்னை வெறுக்க மாட்டார்கள் எனப் புட்டீன் நம்புகின்றார். இது இன்னும் எத்தனை நாட்கள் போகிறது பார்ப்போம் என மேற்குலக நாடுகள் காத்திருக்கின்றன. ஆனால் புட்டீன் தனது பரப்புரைகள் மூலம் உக்ரேனிய மக்களை தற்போது உள்ள மேற்குலகு சார்பான நாடுகளுக்கு எதிராகத் திருப்ப முயல்கின்றார்.


அமெரிக்கா உட்பட நேட்டோ நாடுகளின் எல்லைகளை நோக்கி தனது போர் விமானங்களை அனுப்பி அந்த நாடுகளின் குடிசார் விமானப் போக்கு வரத்திற்கு அச்சுறுத்தல்களை இரசியா ஏற்படுத்துகின்றது. கடைசியாக 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் திகதி இரசியாவின் நான்கு இயந்தரங்கள் கொண்ட Tu-95 Bear H bombers என்னும் இரு போர் விமானங்கள் பிரித்தானிய வான் எல்லைக்கு 25 மைல்கள் வெளியில் பறப்புக்களில் ஈடுபட்டிருந்தன.  அவற்றை பிரித்தானிய Eurofighter Typhoon போர் விமானங்கள் கண்காணித்து அவற்றின் அலைவரிசையைக் குழப்பும் வேலைகளில் ஈடுபட்டன. இருதரப்பினருக்கும் இடையிலான விண் கிளித்தட்டு விளையயட்டு 12 மணித்தியாலங்கள் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து இலண்டனுக்கான இரசியத் தூதுவரை பிரித்தானிய வெளியுறவுத் துறை அழைத்து விளக்கம் கேட்டது. அதற்குப் பதிலளித்த இரசியத் தூதுவர் தமது Tu-95 Bear H bombers செய்த பறப்புக்கள் ஒரு வழமையான ரோந்துப் பறப்புக்கள் என்றும் அவை எந்த விதத்திலும் அச்சுறுத்தல்களாக அமையாது என்றும் கூறினார்.
உக்ரேன் விவகாரத்தைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோக் கூட்டமைப்பு இரசியாவிற்கு எதிராக தமது வலுவை அதிகரித்தன. இரசியாவின் அடுத்த படையெடுப்பு நடக்கலாம் என்னும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் நேட்டோ தனது படைகளை அதிகரித்தது. இரசியாவின் அச்சுறுத்தலைச் சமாளிக்க ஒரு துரித பதிலடிப் படைக்குழுவையும் நேட்டோக் கூட்டமைப்பு அமைத்தது.

நேட்டோவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் இருக்க இரசியா தனது படைவலுவைக் கூட்டும் திட்டத்தை அதிரடியாக அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு இரசியா தனது அணுக்குண்டு இருப்பைப் பெருமளவில் அதிகரிக்கவுள்ளது என்றார் இரசியாவின் முப்படைத் தளபதி வலெரி ஜெரசிமோவ். அத்துடன் இந்த ஆண்டு இரசியா ஐம்பது கண்டம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணுக்குண்டு கொண்ட ஏவுகணைகளைத் தனது படைக்கு இணைக்கவிருக்கின்றது. அமெரிக்காவின் படைவலு மேலாண்மை இரசியாமீது ஆதிக்கம் செலுத்த முடியாதவகையில் நாம் எமது படைவலுவை அதிகரிப்போம் எனச் சூளுரைத்துள்ளார் இரசியாவின் முப்படைத் தளபதி வலெரி ஜெரசிமோவ்.
இருபது ரில்லியன் ரூபிள் அதாவது 287 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான படைத்துறை புதுப்பிக்கும் ஐந்தாண்டுத் திட்டத்தை இரசியா அறிவித்துள்ளது. அத்துடன் அடுத்த பத்து ஆண்டுகளில் இரசியாவின் படைத்துறையில் முழுமையாகப் புதுப்பிக்கப்படும் என்றும் இரசியா அறிவித்துள்ளது. இத்திட்டங்களை இரசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷேர்கி ஷொய்குவும் உறுதி செய்துள்ளார்.
இரசியாவிடம் தற்போது 8500 அணுக்குண்டுகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவிடம் இருக்கும் குண்டுகளின் எண்ணிக்கையிலும் பார்க்க ஆயிரம் அதிகமானதுமாகும்.
ஏற்கனவே இரசியாவிடம் 3082 போர் விமானங்கள், 15550 போர்த் தாங்கிகள். ஒரு விமானம் தாங்கிக் கப்பல், 352 போர்க்கப்பல்கள் இருக்கின்றன.
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் திகதி ஐரோப்பாவிற்கான பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்புக்குமான நிறுவனத்தில் உரையாற்றிய இரசியப் பிரதிநிதி உக்ரேனிற்கு மேற்கு நாடுகள் படைத்துறை ரீதியில் ஆதரவு வழங்கினால் அது பெரும் அழிவில் முடியும் என எச்சரித்திருந்தார்.
கிரேக்க நாட்டில் புதிதாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தீவிர இடது சாரிகளுக்கு இரசியா நட்புக்கரம் நீட்டியுள்ளது ஐரோப்பியப் பாதுகாப்புத்துறை நிபுணர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதே வேளை கிரேக்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய அலெக்ஸிச் திஸ்பிராஸ் இரசியாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவர இருக்கும் புதிய பொருளாதாரத் தடைகளுக்குத் தன் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.

சில அரசியல் விமசரகர்கள் உக்ரேனின் தற்போதைய நிலை இரண்டாம் உலகப் போரின் முன்னர் போலாந்து இருந்த நிலை போன்றது என்கின்றனர்.

Tuesday 27 January 2015

சீனாவின் அமைதியான எழுச்சியும் அமெரிக்காவை நாடும் அமைதி இழந்த அயல் நாடுகளும்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்தியப் பயணம் சீனாவை உலுப்பியுள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை, துரித வளர்ச்சியடையும் பொருளாதாரம், உலகில் இரண்டாவது ( சில கணிபீடுகளின் படி முதலாவது) பெரிய பொருளாதாரம், உறுதியான அரசு, உலகிலேயா அதிக அளவு வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பு, உலகிலேயே அதிக எண்ணிக்கையான படையினர், நீண்ட வரலாறு, உயர்ந்த கலாச்சாரம் ஆகிய சிறப்பு அம்சங்களைக் கொண்ட சீனா உலக அமைதிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் என்ன பங்களிப்பைச் செய்கின்றது? சீனாவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் உலகப் பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.

அயலவர்களை அமெரிக்காவை நோக்கி நகர்த்தும் சீனா
சீனா உலகப் பெரு வல்லரசாக உருவெடுத்து மற்ற வல்லரசு நாடுகளை ஓரம் கட்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அன்று சோவியத் ஒன்றியம் மேற்கு நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு படைக்கல உற்பத்தியைச் செய்து வீழ்ச்சியடைந்ததை சீனா நன்கு அறியும். இன்று மேற்கு நாடுகளுடன் மோதி விளடிமீர் புட்டீனின் இரசியா பெரும் பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையும் சீனா நன்கு அவதானித்துக் கொண்டிருக்கின்றது. இரசியாவைப் போல் பொருளாதாரத்தை நெருக்கடிக்குக் கொண்டு செல்ல சீனா விரும்பவில்லை. இதனால் சீனா தனது வளர்ச்சியை அமைதியான எழுச்சி எனப்பெயரிட்டுள்ளது. ஆனால் சீனாவின் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியும் படைவலுப் பெருக்கலும் அதன் அயல் நாடுகளைக் கலவரமடைய வைத்தன. சீனா தனது கடல் எல்லைகளையும் தரை எல்லைகளையும் மற்ற நாடுகள் ஏற்காத வகையில் விரிவு படுத்த முயல்வது இந்த அச்சத்தை மேலும் மோசமாக்கியது. இவை தமது துணைக்கு ஐக்கிய அமெரிக்காவை நாடின. இதன் விளைவாக தென் கொரியா ஜப்பான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் சீனாவிற்கு சவால் விடுக்கக் கூடிய அளவில் அமெரிக்கப் படைத்தளங்கள் உருவாகின. கியூபாவில் இரசியா விட்ட வெற்றிடத்தை சீனா நிரப்ப எந்த முயற்ச்சியும் மேற் கொள்ளவில்லை எனச் சொல்லலாம். அமெரிக்காவின் அயல் நாடுகளுடன் அமெரிக்காவுடன் முரண்பாடுகள் ஏற்படும் போதெல்லாம் சீனா நடு நிலையே வகுத்தது. அமெரிக்காவிற்கு எதிரான ஈரானின் நிலைப்பாட்டிற்கு சீனா பெரும் உதவிகள் எதையும் செய்யாதது ஈரானை சீனாவின் மீது அதிருப்தி கொள்ள வைத்தது.

இரு அம்ச வெளியுறவும் மூன்று திட்ட வர்த்தகமும்
சீனா தனது வெளிநாட்டுக் கொள்கையில் இரு முக்கிய அம்சங்களைக் கடைப்பிடிக்கின்றது. முதலாவது உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தாது இருத்தல் இரண்டாவது அமெரிக்காவுடனான உறவிற்கு முக்கியத்துவம் கொடுத்தல். அத்துடன் மூன்று கேந்திரோபாயங்களையும் சீனா வெளிப்படையாகச் சொல்லியுள்ளது. 1 மத்திய ஆசியாவுடனான புதிய பட்டுப்பாதை 2. தென்கிழக்காசியாவூடாகச் செல்லும் கடல்வழிப்பட்டுப்பாதை. 3. இந்தியா, மியன்மார், பங்களாதேசம் ஆகியவற்றினூடான வர்த்தகப்பாதை. இவை சீனாவின் பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்ட கேந்திரோபாயமாகும். இவற்றிற்கு ஒரு ஆதாரமாக மியன்மாரின் சிட்வே, பங்களாதேசத்தின் சிட்டகொங், இலங்கையின் அம்பாந்தோட்டை, பாக்கிஸ்த்தானின் குவாடர் ஆகிய துறைமுகங்களைக் கொண்ட முத்து மாலைத் திட்டமாகும். நீண்ட கால அடிப்படையில் இவை இந்தியாவைக் கட்டுப்படுத்தும் சீனக் கடற்படைத் துறை முகங்களாக மாற்றப்படும் அபாயம் உண்டு.

அமெரிக்காவும் சீனாவும்
அமெரிக்காவின் உலக ஆதிக்கத்துக்கு சவால் விடுவதோ அல்லது தான் உலகின் முதல்தர ஆதிக்க நாடாக இருப்பதோ சீனாவின் கொள்கை அல்ல என சீனத் தலைவர்கள் வெளிப்படையாகச் சொல்லியிருக்கின்றனர். அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்  ஏற்றுமதி செய்யாமல் சீனாவின் பொருளாதாரம் தாக்குப் பிடிக்காது. சீனாவின் கடன் அமெரிக்க அரசிற்கு மிகவும் அவசியம். ஆனால் 1989-ம் ஆண்டில் இருந்தே சீனாவும் அமெரிக்காவும் ஒன்றை ஒன்று ஐயத்துடனேயே அணுகிவருகின்றன. இந்த ஐய நிலை இன்னும் பல ஆண்டுகள் தொடரும்.  அமெரிக்காவினதும் சீனாவினதும் நலன்கள் பல ஒன்றுபட்டனவாயும், பல ஒன்றிற்கு ஒன்று தேவையானவையாகவும் இருக்கும் வேளையில் பல ஒன்றுடன் ஒன்று முரண்பட்டனவாயும் இருக்கின்றன. அமெரிக்காவுடனான வர்த்தகம் சீனாவிற்கு அவசியம். ஆனால் சீனா அமெரிக்காவில் இருந்து தனது இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. சீனா அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான இரகசியங்களை சீனா இணைய வெளியூடாகத் திருடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது, பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து அமெரிக்காவும் சீனாவும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இரு நாடுகளும் தமது பெரிய படை நடவடிக்கைகள் தொடர்பாக மற்ற நாட்டுக்கு அறிவிப்பதாக 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒத்துக் கொண்டுள்ளன. அதைத் தொடர்ந்து கடற்பரப்பில் எதிர்பாராத மோதல்களைத் தவிர்பதற்கான ஒரு ஒழுக்கக் கோவை ஒன்றையும் இரு நாடுகளும் உருவாக்கியுள்ளன.

உலக வங்கியை மீறிய சீன வங்கிகள்
சீன அரச வங்கிகள் உலக வங்கியிலும் பார்க்க அதிக அளவு கடன்களை அபிவிருத்தியடையும் நாடுகளுக்கு வழங்குகின்றன. சீனா இந்த நிலையை 2010-ம் ஆண்டிலேயே அடைந்து விட்டது. 2009-10 ஆண்டுக் காலப் பகுதியில் சீன அரச வங்கிகள் அபிவிருந்தியடையும் நாட்டு அரசுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் 110 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியிருந்தன. அதே காலப்பகுதியில் உலக வங்கி நூறு பில்லியன் டொலர்களை மட்டுமே கடனாக வழங்கியிருந்தது. 2014-ம் ஆண்டு எரிபொருள் விலை வீழ்ச்சியால் நிதி நெருக்கடியைச் சந்தித்த இரசியாவிற்கும் வெனிசுவேலாவிற்கும் கடன் வழங்கி அவை பன்னாட்டு நாணய நிதியத்தில் நிபந்தனைகளுடன் கூடிய கடன்களை வாங்குவதில் இருந்து பாதுகாத்தது.

சீனாவின் புதிய குடியேற்ற (நவ காலனித்துவ) நாடுகள்?
1990களில் இருந்து ஆபிரிக்கக் கண்டங்களில் உள்ள நாடுகளில் உள்ள மூல வளங்கள் சீனாவின் அபிவிருத்திக்கு அவசியம் தேவைப் பட்டபோது சீனா பல ஆபிரிக்க நாடுகளுடன் தனது பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொண்டது. 2012-ம் ஆண்டு ஆபிரிக்க நாடுகளின் புதிய குடியேற்ற மேலாளராக சீனா உருவெடுக்கின்றது என்ற குற்றச்சாட்டுப் பரவலாக முன்வைக்கப்பட்டது. இது சீனப் பொதுவுடமைவாதிகளுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இதை அவர்கள் வன்மையாக மறுத்ததுடன் ஆபிரிக்க நாடுகளின் எண்ணெய் வளம், கனிம வளம், மற்றும் விவசாய உற்பத்திகளுக்கு சீனா சிறந்த சந்தையாக விளங்குகின்றது என்றனர். மேலும் அவர்கள் சீனர்களும் ஆபிரிக்கர்களும் ஒருவரை ஒருவர் சம நிலை நண்பர்களாக இருப்பதுடன் என்றும் சிறந்த பங்காளர்களாகவும், அன்பான சகோதரர்களாகவும் இப்போம் என்றனர். சீனா ஆபிரிக்காவில் (2012வரை) நூற்றுக்கு மேற்பட்ட பாடசாலைகளையும், முப்பதிற்கு மேற்பட்ட மருத்துவ மனைகளையும் முப்பதிற்கு மேற்பட்ட மலேரியாத் தடுப்பு நிலையங்களையும், இருபதிற்கு மேற்பட்ட விவசாய தொழில்நுட்ப வழிகாட்டல் நிலையங்களையும் உருவாக்கியுள்ளதுடன் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முன்னுரிமைக் கடனையும் வழங்கியுள்ளது எனப் பட்டியலிட்டனர் சீனப் பொதுவுடமைவாதிகள். இவற்றுடன் நிற்கவில்லை சீனா நாற்பதினாயிரம் ஆபிரிக்கர்களுக்குப் பயிற்ச்சி வழங்கியதுடன் இருபதினாயிரம் ஆபிரிக்கர்களுக்கு புலமைப் பரிசில்களையும் வழங்கியுள்ளது. ஆனால் ஆபிரிக்க நாடுகளில் முதலிட்ட சீனா அங்கு வேலை செய்ய தனது நாட்டில் இருந்து தொழிலாளர்களை அனுப்பியது பல ஆபிரிக்கர்களைச் சிந்திக்க வைத்தது. சில ஆபிரிக்கநாடுகளின் தலைவர்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுத்து சீனா பல ஆபிரிக்க நாடுகளைத் தனது காலனித்துவ நாடுகளாக்கிக் கொண்டு வருகின்றது என்ற குற்றச் சாட்டையும் முன்வைத்தனர். சீனா மேற்கத்திய நாடுகளைப்போல் எந்த ஒரு நாட்டையும் தனது காலனித்துவ நாடாக மாற்றாது எனச் சீனத் தலைவர்கள் மறுத்தனர்.

அயோக்கிய ஆட்சியாளர்களும் சீனாவும்

சீனா பல நாடுகளுக்கு வழங்கும் நிபந்தனையற்ற கடன்கள் ஊழல் மற்றும் மக்கள் மீது அட்டூழியம் செய்யும் அயோக்கிய ஆட்சியாளர்களைப் பதவியில் வைத்திருக்க உதவி செய்கின்றன. அந்த அயோக்கிய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை கிளர்ச்சி செய்யும் நடவடிக்கைகளை மேற்கத்தைய நாடுகள் இலகுவாக மேற்கொள்ள கூடியதாக இருக்கின்றது. 2013-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆபிரிக்க நாடுகளுக்கு மேற்கொண்ட பயணமும் அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வாஷிங்டனில் ஐம்பது ஆபிரிக்க நாட்டுத் தலைவர்களை அழைத்து ஒரு மாநாடு நடத்தியமையும் ஐக்கிய அமெரிக்கா ஆபிரிகாவில் சீனா ஆதிக்கத்தை தணிக்கவும் ஆபிரிக்க நாடுகளுடன் அமெரிக்காவின் உறவை வளர்க்கவும் எடுத்த நடவடிக்கைகளே. உலகின் வேகமாக வளரும் முதற் பத்து நாடுகளில் ஆறு ஆபிரிகாவில் உள்ளன. இதனால் ஐக்கிய அமெரிக்கா ஆபிரிக்காவில் அதிக அக்கறை காட்டுவது தவிர்க்க முடியாதது. ஒபாமா ஆபிரிக்க நாடுகளுடன் மாநாடு நடாத்தும் போது அங்கு அழைக்கப்பட்ட கினியா, கம்பியா, எதியோப்பியா ஆகிய நாடுகளின் அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக பலர் ஆர்ப்பாட்டம் நடாத்தினர்.
சீனா தனது வெளியுறவுக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
சீனா சொல்வது போல் மற்ற நாடுகளுடன் பங்காண்மையை வளர்க்க வேண்டுமாயின் அந்த நாடுகளில் நல்லாட்சியை உறுதி செய்ய வேண்டும். அல்லது  அங்கு படைத்துறைப் புரட்சி, அரசுக்கு எதிரான கிளர்ச்சி, அல்லது பெரும் பணம் செலவழித்துப் பல அரசியல்வாதிகளைக் கட்சி மாறச் செய்தல் போன்றவற்றால் அங்கு சீனாவிற்கு சார்பற்றவர்களை மேற்கு நாடுகளால் ஆட்சி மாற்றம் செய்ய முடியும். இப்படிப்பட்ட ஆட்சி மாற்றங்களால் சீனா பெரும் முதலீடுகளால் உருவாக்கும் தனக்குச் சார்பான ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்து இலகுவாகத் தூக்கி எறிவதைத் தடுக்க தனது வெளியுறவுக் கொள்கையில் பெரு மாற்றங்கள் செய்ய வேண்டும்.

Sunday 25 January 2015

அமெரிக்காவின் நீர்மூழ்கி அழிப்பு உலங்கு வானூர்திகள்

அமெரிக்கா தனது கடற்படைக்கு SH-2G Super Seasprite என்னும் நீர் மூழ்கி அழிப்பு உலங்கு வானூர்திகளை உற்பத்தி செய்துள்ளது. இவை நீர் மூழ்கிகளை அழிப்பதுடன் கடல் மேற்பரப்பில் உள்ள கலன்களை அழித்தல், கடற் கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்தல்,  தொடுவானத்தில்(horizon) இலக்கு வைத்தல், வேவுபார்த்தல், மீட்புப் பணி, தேடிவிடுவித்தல், இரகசிய நடவடிக்கைகள் போன்றவற்றையும் செய்யக் கூடியன.

SH-2G Super Seasprite என்னும் நீர் மூழ்கி அழிப்பு உலங்கு வானூர்திகள் இரு விமானிகளையும் ஒரு உணரி இயக்குனரையும் (sensor operator) கொண்டது. ஒரு விமானியாலும் இதை இயக்க முடியும். இதில் உள்ள ஒன்றிணைக்கப்பட்ட integrated tactical avionics system (ITAS)மிகவும் இசைவிணக்கம் (flexible)உடையதாகும்.
விமானப் பறப்பியக்கம் (avionics) என்பது இலத்திரனியல் மூலம் விமானம், செய்மதி போன்றவற்றை இயக்கும் முறைமையாகும். இதில் தொடர்பாடல், வழிகாட்டல், காட்சி, பல் முறைமை முகாமை போன்ற நூற்றுக் கணக்கான செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Avionics are the electronic systems used on aircraft, artificial satellites, and spacecraft. Avionic systems include communications, navigation, the display and management of multiple systems, and the hundreds of systems that are fitted to aircraft to perform individual functions.

SH-2G Super Seaspriteஇல் உள்ள கண்ணாடியிலான cockpit நான்கு நிறங்களில் காட்சிப்படுத்தக் கூடியது. இவற்றில் உள்ளடக்கக் கூடிய படைக்கலன்கள்:
Raytheon AGM-65

1. Raytheon AGM-65 Maverick infrared imaging or TV-guided
2. Penguin infrared imaging.
3. Radar-guided Improved Sea Skua
4. Laser-designated Hellfire missiles.

SH-2G Super Seasprite உலங்கு வானூர்தியில் பொருத்தப்பட்டிருக்கும் LN-66HP multi-mode radar மூலம் கடற்கப்பல்களை வேவுபார்த்தலும் இலக்குப் பார்த்தலும் செய்ய முடியும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...