Thursday 11 May 2017

பல் முனைகளில் சீனா எதிர் கொள்ளும் மும்முனைப் பிரச்சனைகள்

கடந்த முப்பது ஆண்டுகளாக வேறு எந்த நாடும் அடையாத பொருளாதார அபிவிருத்தியை சீனா அடைந்துள்ளது. உலகில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும் உலகில் இரண்டாவது பெரிய படைத்துறைச் செலவு செய்யும் நாடாகவும் சீனா இப்போது இருக்கின்றது. 2030இல் சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக வரும் என எதிர் பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே அமெரிக்காவிலும் பார்க்க அதிக அளவு உலக வர்த்தகத்தை சீனா செய்கின்றது.
மற்ற நாடுகளிலும் பார்க்க அதிக அளவு உட்கட்டுமான முதலீட்டை சீனா அதிக அளவு நாடுகளில் செய்துள்ளது. எல்லாக் கண்டங்களிலும் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீட்டை சீனா செய்துள்ளது. ஆசியாவில் உள்ள நாடுகள் பலவற்றின் பொருளாதார நடுவமாக சீனா மாறியுள்ளதுஇவை யாவும் சீனா தன்னை படைத்துறை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஓர் உலகப் பெருவல்லரசாக உருவாக்கும் முயற்ச்சியே.

சீனாவின் மூன்று அதிகார மையங்களும் மூன்று கோடுகளும்
சீனப் பொதுவுடமைக் கட்சி, சீன அரசு, சீனப்படைத்துறை ஆகிய மூன்று அதிகார மையங்களும் சீனாவின் பாட்டாளி வர்க்கத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்டவை. சீனப் பொதுவுடமைக் கட்சி தன் பொதுவுடமைச் சித்தாந்தங்களை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு 2001-ம் ஆண்டு உலக வர்த்தக நிறுவனத்தில் இணைந்தபடியால் பல கோடி பாட்டாளிகள் வறுமைக் கோட்டின் கீழ் இருந்து மீட்கப்பட்டார்கள். அப்படி ஒன்று செய்திருக்காவிட்டால் சீனப் பாட்டாளிகள் பொறுமைக் கோட்டைத் தாண்டிக் அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து இருப்பார்கள். இப்போது மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் பற்றிச் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தியா பொருளாதாரத்தில் சீனாவை மிஞ்சிப் போகுமானால் இந்தியாவைப் போல் ஒரு மக்களாட்சியை சீனர்கள் விரும்பலாம். அது மூன்று அதிகார மையங்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும். அது மட்டுமல்ல சீனா தனது தேச எல்லைக் கோட்டை விரிவாக்க எடுக்கும் முயற்ச்சி அதன் அயல் நாடுகளை ஒன்று திரட்டச் செய்யலாம். இதுவும் சீனாவின்று அச்சுறுத்தலான ஒன்றே.

சீனாவைச் சுற்றி மூன்று முனைகள்
1. ஹொங் கொங் தீவு சீனாவின் ஆட்சிக்குக் கீழ் உள்ள ஒரு பிரதேசம். ஒரு நாடு இரு ஆட்சிமுறைமைகள் என்ற அடிப்படியில் சீனா ஹொங் கொங்கை ஆட்சி செய்கின்றது. 1888-ம் ஆண்டில் இருந்து 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த ஹொங் கொங் மக்கள் பிரதான சீனாவில் வாழும் மக்களை கல்வியறிவு அற்றவர்களாகவும் பண்பற்றவர்களாகவும் பார்க்கின்றனர். அதனால் தம்மை சீனர்கள் என அழைக்கப்படுவதை தாம் விரும்புவதில்லை. சீனப் பொதுவுடமைவாதிகள் ஹொங் கொங் மக்களை மக்களாட்சியால் பழுதாக்கப் பட்டவர்களாகப் பார்க்கின்றார்கள். சீனாவில் இருந்து ஹொங் கொங் பிரிந்து செல்வதற்கு ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை என்பதை ஹொங் கொங் மக்கள் நன்கு அறிவர். ஆனால் அவர்கள் தமக்கு அதிக ஆட்சி அதிகாரம் பெற விரும்புகின்றனர். ஹொங் கொங் மக்களைப் பார்த்து சீனாவில் வாழும் மக்கள் மக்களாட்சியை விரும்புபவர்களாக மாறலாம் என்பதை இட்டு சீன ஆட்சியாளர்கள் அதிக கரிசனை கொண்டுள்ளார்கள்.
2. கொரியத் தீபகற்பகம் முழுவதையும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஒரு பொதுவுடமை நாடாக்க சீனாவும் இரசியாவும் எடுத்த முயற்ச்சி மூன்று ஆண்டுப் போரின் பின்னர் கொரியத் தீபகற்பம் வட கொரியா தென் கொரியா என இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது. தென் கொரியா அமெரிக்க ஆதரவு நாடாக பொருளாதார முன்னேற்றம் கண்டதுடன் அங்கு 52,000 அமெரிக்கப் படையினர் உள்ளனர். சீனாவிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய படைக்கலன்களை அமெரிக்கா அங்கு நிறுத்தியுள்ளது சீனாவிற்குப் பெரும் தலையிடி.
3. தைவான் தீவைத் தன்னுடைய ஒரு மாகாணம் என்று சொல்லும் சீனா ஒரே நாடு என்பது என் விதி (0ne country principle) என்கின்றது. சீனாவும் தைவானும் ஒரே நாடு என்பது எமது கொள்கை (One country policy) ஆனால் அது விதியல்ல என்கின்றது அமெரிக்கா. தைவானுக்கு பல வலிமை மிக்க போர் விமானங்களை அமெரிக்கா விற்பனை செய்கின்றது. அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமான F–35 விமானங்களை வாங்க தைவான் பெரு முயற்ச்சி எடுக்கின்றது. அத்துடன் சீனாவைத் தாக்கக் கூடிய அளவில் பெருமளவு ஏவுகணைகளை தைவான் உற்பத்தி செய்கின்றது. தைவானை சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் நிலையான விமானம் தாங்கிக் கப்பல் என்று கூட சில படைத்துறை நிபுணர்கள் விபரிப்பதுண்டு.

சீனாவை சுற்றி மூன்று நாடுகள்
1. ஜப்பான் அணுப்படைகலன்களை ஏந்தக் கூடிய வகையில் நிலைமைகள் மாறலாம் என அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ரெக்ஸ் ரில்லர்சன் தெரிவுத்துள்ளார். எம்முன்னால் பல தெரிவுகள் உள்ளன. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் எனச் சொல்ல முடியாது என்றார் ரில்லர்சன்.  அணுக்குண்டுகள் இல்லாத கொரியக் குடாநாடு அணுக்குண்டு இல்லாத பிராந்தியமாக மாறினால் ஜப்பான் அணுக் குண்டுகளை உள்ள நாடாகுவதை இல்லாமற் செய்யலாம் என்றார் மேலும் அவர்.  ஜப்பான் தொடர்பாக அமெரிக்க அணுகு முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜோர்ஜ் டபிளியூ புஷ் அமெரிக்க அதிபராக இருக்கும் போது வட கொரியா அணுக்குண்டு உற்பத்தி செய்வதை நிறுத்தாவிடில் தென் கொரியா, ஜப்பான், தைவான் ஆகியவை அணுக்குண்டுகளைப் பெறும் என சீனாவிற்கு எச்சரிக்கை விடப்படிருந்தது.
2. இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் வேகமாக வளர்ந்து வருகின்றது. முதலீடுகளிற்கான இலாப விகிதாசாரத்தில் சீனாவிலும் பார்க்க இந்தியா முன்னணியில் இருக்கின்றது. சீனாவின் ஏற்றுமதிச் சந்தையைப் பறிக்கக் கூடிய நிலையில் சீனா இருப்பதுடன் படைத்துறையிலும் சீனாவிற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் உருவெடுக்கின்றது. சீனா இரசியாவிடம் இருந்து எஸ்-யூ-35 போர்விமானங்களை வாங்கி தனது வான் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளது. அதைத் தகர்க்கும் வகையில் இந்தியா தான் இரசியாவிடமிருந்து வாங்கு வைத்திருக்கும் எஸ்-யூ-30 போர் விமானங்களை எஸ்-யூ-35 போர் விமானங்கள் போல் மேம்படுத்தப் போகின்றதாக அறிவித்துள்ளது. அத்துடன் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகள் சீனாவிற்குப் பெரும் சவாலாக இருக்கையில் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் Meteror என்னும் வானில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகணைகளை வாங்கவுள்ளது. வான் சண்டையில் ஏவுகணைகள் தற்போது உள்ள வான் ஏவுகணைகளில் தலை சிறந்ததாகக் கருதப்படுகின்றது. வானாதிக்கத்தில் சீனாவை மிஞ்சக் கூடிய வகையில் இந்தியா உருவெடுத்து விடுமா என்ற நிலை உருவாகியுள்ளது.
3. இரசியா சீனாவின் நடபை விரும்பினாலும் மத்திய ஆசிய நாடுகளில் சீனாவின் விரிவாக்கத்தை இரசியா விரும்பவில்லை. இரசியாவிற்கு மேற்கு உள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் அபகரிக்க இரசியாவிற்கு தெற்கில் உள்ள மத்திய ஆசிய நாடுகளை சீனா அபகரிப்பதை இரசியா தனக்கான அச்சுறுத்தலாகவே எடுத்துக் கொள்ளும். உக்ரேனில் நடந்தது போன்ற ஒரு படை நகர்வு மத்திய ஆசிய நாடுகளில் சீனாவிற்கு எதிராக நடக்கலாம்.

உள்நாட்டில் சீனாவின் மும்முனைப் பிரச்சனைகள்.
சீனாவின் உள்நாட்டில் ஊழல், இஸ்லாமியத் தீவிரவாதம், மக்களில் முதியோர் தொகை அதிகரிப்பு ஆகியவை மூன்று பெரும் தலையிடிகளாகும். துருக்கியைப் பூர்வீகமாகக் கொண்ட உய்குர் இனமக்கள் சீனாவின் சின் ஜியாங் பிராந்தியத்தில் வசிக்கின்றனர். இஸ்லாமியர்களான இவர்கள் பிரிவினை வேண்டிப் போராடுகின்றார்கள். சீனாவின் உள்ள ஊழலை ஒழிக்க அதிபர் ஜி ஜின்பிங் எடுக்கும் நடவடிக்கைகள் பொதுவுடமைக் கட்சியில் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. சீனாவின் முதியோர் தொகை குறைவாகவும் இளையோர் தொகை குறைவாகவும் இருப்பது பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. சினா உலகப் பொருளாதார வல்லரசாகுவதற்கு இதுவே பெரும் தடையாகும். 

முப்பெரும் பொருளாதாரப் பிரச்சனைகள்
1. மிகையான உற்பத்தி சாதனங்கள்
உலகெங்கும் சீனாவின் ஏற்றுமதிக்காக உருவாக்கப் பட்ட உற்பத்தி சாதனங்கள் பல இப்போது பயன்பாடற்று இருக்கின்றன. இவற்றின் அரசுக்கு சொந்தமான பல நிறுவனங்கள் இலாபத்திறனற்றுக் கிடக்கின்றன.
2. உயர் தொழில்நுட்பத்துக்கு மாற முடியாத நிலைமை
சீனா தனது உற்பத்தியை உயர் தொழில்நுட்பத்திற்கு மாற்ற எடுக்கும் முயற்ச்சி வெற்றியளிக்கவில்லை. ஏற்கனவே முன் தங்கியுள்ள மேற்கு நாடுகள் சீனா தனது தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் போது தாமும் மேம்படுத்தி தொழில்நுட்ப இடைவெளியை சீனாவால் குறைக்க முடியாத நிலையை உருவாக்குகின்றன.
3. உள்ளூராட்சிச் சபைகளின் நிதி நிலைமை
சீனாவின் பல உள்ளுராட்ச்சிச் சபைகள் கடன் பளுவால் தவிக்கின்றன. அவற்றுக்கு கடன் கொடுத்த சீன அரச வங்கிகள் அறவிட முடியாக் கடன்களால் தவிக்கின்றன.
நம்ப முடியாத மூன்று நண்பர்கள்
சீனாவிற்கு என்று ஒரு நெருங்கிய நட்பு நாடு இல்லை அது ஒரு தனித்த வல்லரசு என்று சொல்லப்படுகின்றது. சீனாவின் நடபுப் பட்டியலில் முன்னணியில் இருப்பவை வட கொரியா, இரசியா. பாக்கிஸ்த்தான் ஆகியவையாகும். இரசியாவிடமிருந்து படைக்கலன்கள் வாங்குவதற்கு சீனா அதை தன் நட்பு நாடாக வைத்திருக்க முயல்கின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினதும் வட அமெரிக்க நாடுகளினதும் பொருளாதார மிரட்டல்களைச் சமாளிக்கவும் படைக்கலன்களை விற்பனை செய்யவும் இரசியாவிற்கு சீனா தேவைப் படுகின்றது. இரண்டு நாடுகளும் பொதுவுடமை நாடுகளாக இருந்த போது கூட நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்திருக்க வில்லை. ஒன்றை ஒன்று ஐயத்துடனேயே பார்த்து வந்தன. பாக்கிஸ்த்தானுக்கு அமெரிக்காவும் தேவை சீனாவும் தேடை என்ற நிலையில் இருக்கின்றது. சீனாவின் தரைவழிப் பட்டுப்பாதைக்கும் கடல்வழிப் பட்டுப்பாதைக்கும் பாக்கிஸ்த்தான் அவசியம் தேவைப்படுகின்றது. வட கொரியா இப்போது தன அணுக்குண்டு அடாவடித்தனத்தால் சீனாவிற்கு ஒரு பிரச்சனையாக இருக்கின்றது.

மூன்று பிடிகள்
1. பொதுவுடமைக் கட்சியின் நாட்டின் மீதான பிடி, 2. பொதுவுடமைக் கட்சியின் 3, படையினர் மீதான பிடி
எல்லாவற்றிலும் ஜி ஜின்பிங்கின் பிடி

மூன்று குற்றச் சாட்டுக்கள்
1. உள் நாட்டு வர்த்தகர்களுக்கு ஊக்கமளிக்க வெளிநாட்டு வர்த்தகர்களுக்குப் பாதகமாக நடந்து கொள்ளுதல். 2. இணையவெளித் திருட்டு. 3. போலியான பொருளாதாரப் புள்ளிவிபரங்கள்

மூன்று கடன் பளுக்கள்
1. உள்ளூராட்சி நிறுவனங்கள். 2. கூட்டாண்மைக் கடன். 3. வங்கிகள்

சீனா விரும்பாதவை மூன்று
1. வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் 2. தொண்டு நிறுவனங்கள், 3. வெளிநாட்டு ஊடகங்கள், வெளிநாட்டு ஊடகங்கள் போன்றவை தனது நாட்டில் குழப்பத்தை விளைவிக்கலாம் என்ற அச்சம் சீனாவுக்கு உண்டு, அவற்றிற்கு எதிரான கட்டுப்பாடுகளை சீனா அதிகரித்துக் கொண்டே போகின்றது. இந்த மூன்றிற்கும் எதிராகச் செயற்பட காவற்துறைக்கு சீன அரசு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது கல்விமான்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியவர்கள் தனது நாட்டில் வந்து தனது ஆட்சி முறைமைக்கு எதிரான கருத்துரைகளை வழங்குவார்களா என்ற அச்சம் சீனாவிடம் உள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் இந்த மூன்று துறைகளையும் சேர்ந்த நிபுணர்களை வைத்து அடிக்கடி பல மாநாடுகள், கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள் போன்றவற்றைச் செய்கின்றது. அது நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகின்றது. மேற்கு நாடுகள் என்னதான் குடிவரவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தாலும் வெளிநாட்டில் இருந்து நிபுணத்துவம் பெற்றவர்கள் வந்து தமது நாடுகளில் குடியேறுவதை ஊக்குவித்துக் கொண்டே இருக்கின்றது.

சீனா அமெரிக்காவுடன் செய்ய விரும்பாதவை மூன்று
சீனா அமெரிக்காவுடன் ஒரு வர்த்தகப் போரையும், படைக்கல உற்பத்திப் போட்டியையும், நேரடி மோதலையும் செய்யக் கூடாது என்பதை உணர்ந்துள்ளது. இவை இரு நாட்டுக்கும் பெரும் கேடு விளைவிக்கக் கூடியவை என்பதை இரு நாடுகளும் நன்கு உணர்ந்துள்ளன.


இவை முன்றும்தான் உலக அமைதிக்குக் காரணிகளாக இருக்கின்றன. இருக்கப்போகின்றன. 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...